எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களின் 2 விசைபடகுகளையும் பறிமுதல் செய்தது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர், பிரதமர், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
இந்தநிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரத்தை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே கடற்படை கப்பலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மேற்கண்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்ததுடன், அவர்களது 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு விசைப்படகுடன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 33 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.