ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர பகுதிகளில் நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
கச்ச தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஒரு விசைப்படகு மற்றும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். அவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து அவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 49 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் மண்டபம் மீனவர்கள் 10 பேர் மற்றும் ஒரு விசைப்படகு சிறை பிடிக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.