/indian-express-tamil/media/media_files/j86GRJ9DQ3syNyM91a7a.jpg)
Sri Lankan Navy Rameswaram Karaikal fishermen arrest Indian fishermen detained
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களையும், காரைக்காலைச் சேர்ந்த 17 மீனவர்களையும், மொத்தம் 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்தத் தொடர் நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் 30 பேர் கைது:
நேற்று (அக்டோபர் 9, 2025) காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இவர்கள் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 விசைப்படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் 17 பேர் பிடிபட்டனர்:
அதேபோல, இன்று அதிகாலை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரு படகையும் அதிலிருந்த 17 மீனவர்களையும் கைது செய்தனர். இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மொத்தம் 5 விசைப்படகுகளையும், 47 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற இந்தச் சம்பவம், தமிழக மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.