எந்த பாசிச சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது: ஸ்டாலின் முன்னிலையில் சூரியனார் சுவாமிகள் பேச்சு
சென்னை லயோலா கல்லூரியில் நடந்த அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் ’அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில்;
Advertisment
இந்த கிறிஸ்துமஸ் விழாவை, கிறிஸ்துமஸ் விழா என்று மட்டும் சொல்லாமல் ‘அன்பின் கிறிஸ்துமஸ் விழா’ என்று இனிகோ இருதயராஜ் குறிப்பிட்டுள்ளார். எந்த விழாவாக இருந்தாலும் அது அன்பின் விழாவாக – அனைவரின் விழாவாக அது அமையும்.
13 ஆண்டு காலமாக ஆண்டுதோறும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். நாங்களெல்லாம் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி அமைப்போம். ஐந்து வருடத்திற்கு முறை அந்தக் கூட்டணி அமைக்கப்படும். இவர் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு வருடமும் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி அமைக்கக்கூடிய அந்தக் கூட்டணிக்கு என்னையும் அழைத்து வருகிறார்.
Advertisment
Advertisements
இது மதத்தின் விழாவாக இல்லாமல் - ஒரு மத நம்பிக்கையாளர்கள் பங்கேற்கக்கூடிய விழாவாக இல்லாமல் அனைத்து மதத்தவரும் பங்கேற்கக்கூடிய வகையில் இந்த விழா நடக்கிறது.
சூரியனார் கோவில் மடத்தின் - மகாலிங்க தேசிக பரமாச்சார்யார் சுவாமிகள் அவர்களும், ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூடத்தைச் சேர்ந்த முகமது இம்ரானுல்லாஹ் பாகவி அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே இது அன்பின் பெருவிழாவாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவே சாட்சி.
உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். இயேசு கிறிஸ்து பெருமானின் இந்த ஒரு அறிவுரையைப் பின்பற்றினாலே உலகம் எங்கும் அமைதி தவழும்.
மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரு தாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது. இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பது, அதுதான் இன்றைக்கு இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று ஸ்டாலின் பேசினார்.
குறிப்பாக இந்த விழாவில் சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசியது அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசுகையில்;
1967ல் காந்தி தந்த அறிஞர் அண்ணா வழியில், திருவாரூர் தந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியிலும், கோபாலபுரம் தந்த எங்கள் குமாரர் மக்கள் தளபதி மு.க.ஸ்டாலின் வழியிலும் தான் என்றென்றும் தமிழகம் செல்லும். இந்த சபையில் நீங்கள் எல்லாருமே பயப்படுகிறீர்கள். சிறுபான்மை என்று கூறினீர்கள். நாம் அனைவருமே பெரும்பான்மை தான்.
நம் எல்லாருமே இனத்தில் தமிழர்கள், மொழியில் தமிழ் பேசுகிறோம், அப்படியானால் நாம் எல்லாரும் ஒன்றுதானே. அப்போது ஏன் நாம் பயப்பட வேண்டும். எந்த பாசிச சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசக்கூடாது, இருந்தாலும் வட இந்தியாவில் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா எனும் கொள்கை இருந்தது. ஆனால் நம் கேரளத்தில் கம்யூனிஸ்டும், தமிழகத்தில் திராவிட கழகமும் இருந்ததால் அவர்களால் ஒருபோதும் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ஓட்டுரிமை உங்கள் கையில் இருக்கும் போது ஏன் பயப்பட வேண்டும். நமக்கு தெரிந்தது இரண்டு சின்னம் தான். ஒருவர் இங்கிருக்கிறார். இன்னொன்று நான் சொல்லக்கூடாது. இவர்களோடு முதுகில் ஏறிதான் அவர்கள் பயணம் பண்ண முடியும்.
யாராக இருந்தாலும் எதிரி இருந்தால் தான் நாம் வளர முடியும், இல்லையெனில் நாம் வளர முடியாது.
மதமாற்றத்துக்கு நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். உங்கள் வழிபாடுகளை சிறப்பாக செய்யுங்கள், அவர்கள் தானாகவே வருவார்கள்.
சுவாமிகள் பேசிய இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விழாவில், அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி மற்றும் அன்பில் மகேஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ்,ஜே. கருணாநிதி, ஐ-டிரீமஸ் மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“