கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.என். ஶ்ரீதர் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், “சென்னை கன்னியாகுமரி தொழில் தட திட்ட இயக்குநராக பணியாற்றிய நான் இன்று குமரி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்டேன்.
குமரி ஒரு அழகான சிறிய மாவட்டம். மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை இன்னும் சிறப்பாக மாவட்ட மக்களின் தேவை அறிந்து செயல்படுத்துவதில் முன்னுரிமை கொடுப்பேன்.
குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து சட்டத்திற்கு உட்பட்ட வகையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.
குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் நகர்ப்புற பகுதிகள் அதிகம். நகர்புற நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், சுற்றுலா, வனம், மீன்வளத்துறை உள்ளிட்ட திட்டங்களுக்கு முன் உரிமை கொடுப்பேன். செய்தியாளர்கள் சந்திப்பும் தொடர்ந்து நடத்துவேன்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/