எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் உட்பட 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்ய மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் கடந்த 7ஆம் தேதி காரைக்கால் மாவட்ட மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து காரைக்கால் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் மயிலாடுதுறை, நாகை சேர்ந்த 6 மீனவர்கள் என மொத்தம் பத்து மீனவர்கள் நடுக்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் உட்பட தமிழகத்தை சேர்ந்த 10 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுதலை செய்ய மீனவர்களின் உறவினர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“