திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேசுகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கண்ணுடையான்பட்டி சமுத்திரபாலம் கட்டுவதற்கு வந்த திட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு தாரைவார்க்கப்பட்டது. இதனால், எங்கள் அமைச்சர் கே.என்.நேரு மீது அளவிட முடியாத வருத்தம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிக்கு என்ன வருகிறதோ அதை செய்யுங்கள். அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். இந்தப் பாலம் வேறு தொகுதிக்குச் சென்றதால் ஸ்ரீரங்கம் தொகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆவேசமாக பேசியது கூட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
செய்தி: க.சண்முகவடிவேல்