ஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை, யானை மூலமாக வரவேற்பு ஆகியன வழங்கப்பட்டன. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு?
ஸ்ரீரங்கம், அரங்கநாதர் சுவாமி கோவில் இந்து மத ஆன்மீகத் தலங்களில் முக்கியமானது. தேசிய அளவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் அவ்வப்போது இங்கு வந்து அரங்கநாதரை தரிசித்து செல்வது வழக்கம்!
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அண்மையில் வந்த விஐபி, ஹெச்.டி.குமாரசாமி. கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றதும் அவர் வந்து தரிசித்த இடம் ஸ்ரீரங்கம் கோவில்தான். இந்தச் சூழலில்தான் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 22) ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது ஸ்ரீரங்கம் கோவிலில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பேசுபொருள் ஆகியிருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
திமுக பிரமுகரின் இல்ல திருமண விழா மற்றும் காதணி விழாவுக்காக ஸ்ரீரங்கம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் பட்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். யானை மூலமாக மாலை அணிவித்தும் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கே.என்.நேரு உள்பட திருச்சி திமுக விஐபி.க்களும் கலந்து கொண்டனர்.
திருச்சி ஸ்ரீங்கத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘நாட்டை பற்றியோ, மக்களை பற்றியோ கவலைப்படாத அரசாக மத்தியில் ஆளும் மோடி அரசு உள்ளது. அதனை பின்பற்றித்தான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சி தொடர்ந்து 7 ஆண்டுகள் நடைபெற்றும் இதுவரை உரிய நேரத்தில் காவிரி நீரை பெற்றுத்தர முடியவில்லை. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது மக்கள் நல்ல தீர்ப்பை கொடுக்க வேண்டும்.’ இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.