/tamil-ie/media/media_files/uploads/2023/05/srirangam-1.jpg)
ஸ்ரீரங்கம் வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உடல் அடக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர்தோப்பு பகுதியில் பட்டர்குலாம் என்ற வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது. இந்த வேதபாடசாலையில் படித்து வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஸ்ரீதரன் மகன் விஷ்ணுபிரசாத் (வயது 13), சம்பத் மகன் ஹரிபிரசாத் (14), ஆந்திராவை சேர்ந்த சேஷாத்திரி மகன் சூர்யஅபிராம் (13) ஆகிய 3 மாணவர்கள் கடந்த 14-ந் தேதி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
இந்த மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் மாணவர் ஹரிபிரசாத்தின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர்.
இது குறித்து மாணவரின் தந்தை சம்பத் ஸ்ரீரங்கம் போலீசில் அளித்த புகாரில், "வேதபாடசாலை நிர்வாகிகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு தங்கள் பிள்ளைகள் ஆற்றில் மூழ்கி இறக்க காரணமாகி உள்ளனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தனர்.
ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதாலெட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்தும், இது பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை அடுத்தும் நேற்று இரவு மாணவர் ஹரிபிரசாத் உடலை பெற்றோர் பெற்று சென்றனர். இதற்கிடையே ஆற்றில் மூழ்கி இறந்த மற்றொரு மாணவர் ஆந்திராவை சேர்ந்த சூர்ய அபிராம் உடலை பெற்றோர் ஊருக்கு கொண்டு செல்லாமல், ஸ்ரீரங்கத்திலேயே தகனம் செய்தனர்.
மொத்தத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு நிவாரணம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படாதது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தி: க. சன்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.