தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு கலைஞர் காரணம் என்பதால் அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டசபையில் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக கட்சியை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "எல்லா திறமையும் பெற்ற ஒரு தலைவராக ஆளுமையாக வாழ்ந்தார். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஜனநாயகத் தலைவர் கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
பா.ம.க உறுப்பினர் ஜி.கே மணி பேசுகையில், "காமராசர், தந்தை பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எல்லாத் தலைவர்கள் பெயரிலும் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஏன் நமது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
பேரவையில் பல்வேறு கட்சிகள் இணைந்து கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் கோரிக்கையை ஏற்று பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
"கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கலைஞர் பெயரால், கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதை எவ்வித தயக்கமும் இன்றி அறிவிக்கிறேன். தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு கலைஞர் காரணம்.
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட வேண்டும் என உறுப்பினர்கள் தங்களுடைய உணர்வை எடுத்துச் சொல்லி உள்ளார்கள். அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்" என்றார்.