/tamil-ie/media/media_files/uploads/2019/06/z898.jpg)
Tamil Nadu news today live updates
ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல தமிழ் வார இதழ் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அக்குழுமத்தின் ஆச்சகத்தார் மற்றும் வெளியீட்டாளர், ஆசிரியர் என 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 8ம் தேதி வெளிவந்த அந்த பிரபல வார இதழில், வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ள 'லாட்டரி கிங்' என்றழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ-வுடன் நிதிச் செயல்பாடுகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதாகவும், திமுகவின் தேர்தல் நிதியாக மார்ட்டின் 500 கோடி வழங்கியதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் மார்ட்டின் நிதி வழங்கியதாகவும், கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தை நடத்தியதும் மார்ட்டின் தான் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த வார இதழ் மீது ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், மார்ட்டின் தனது நண்பன் என்பதும், அவர் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்ற செய்தியையும் ஸ்டாலின் மறுத்துள்ளார். குறிப்பாக, மார்ட்டின் திமுகவுக்கு எந்த நிதி உதவியும் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுகவின் ஆடிட்டர் சார்பில் நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், தேர்தல் செலவுக்கு திமுக அவரிடம் இருந்து பணம் வாங்கவில்லை என்பது நிரூபணம் ஆகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தவிர, கொல்கத்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் மார்ட்டினுக்கு என்ன வேலை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.