ஊட்டியில் ஐந்து நாட்கள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின், இன்று விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழலில் இயற்கை அழகை ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கோடை விழா, கடந்த 3-ஆம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவியங்கள் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடைபெற்றது. மேலும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி, மே 15-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 11 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த மலர் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு வருகை தந்தார். மேலும் அங்கு மசனகுடியில் உள்ள யானைகள் முகாம், பழங்குடியினர் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.
தற்போது, ஐந்து நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கோவை விமான நிலையம் வந்த ஸ்டாலின், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். கோவை மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் அவரை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வருகை தந்தனர்.