/indian-express-tamil/media/media_files/QZ6pSBeYxXUXpLCSupJW.jpg)
அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெற்று தர வேண்டும்; நெல்லையில் முதல்வர் ஸ்டாலின்
அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெற்றுத் தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு மீட்பு பணிகளை செய்து வருகிறது.
இந்தநிலையில், தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது; சென்னை மக்களைப்போல தென்மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன். வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட பல மடங்கு அதிக மழை தென்மாவட்டங்களில் பெய்துள்ளது. சில இடங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் பணி செய்து வருகின்றனர். 12,653 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும். லேசான பாதிப்புகளுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
பிரதமரை மோடி சந்தித்து அடுத்தடுத்து 2 பேரிடர்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெற்று தர வேண்டும். அப்படி வாங்கி கொடுத்தால் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை; நிதியும் ஒதுக்கவில்லை, இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.