தஞ்சையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த ஸ்டாலின்

தஞ்சையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
New Update
stalin

தஞ்சையில் நேற்றும் இன்றும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று மாலை தஞ்சைக்கு வருகை தந்தார். 15 - ம் தேதி மதியம் திருச்சிக்கு விமானம் மூலம் வந்த அவரை, அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றார். 

Advertisment

அதனைத்தொடர்ந்து, கார் மூலம் கல்லணைக்குச் சென்ற அவர், அங்குள்ள நீர்வள ஆதாரத்துறையின் ஓய்வு இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்தார். அதன்பிறகு, ஓய்வு அறையில் இருந்து 200 மீட்டர் தூரம் நடந்து வந்து கல்லணையில் இருந்து பிரியும் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் டெல்டா குறுவை சாகுபடிக்காக மலர் தூவி தண்ணீர் திறந்தார்.

அதன் பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி தஞ்சாவூர் என்று பல பகுதிகளில் முதல்வர் 'ரோடு ஷோ' நடத்தினார். பின்னர் இன்று காலை தஞ்சையில் போக்குவரத்துத் துறைசார்பில் மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

பல்வேறு வழித்தடங்களுக்கு 170 மினி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு இந்த பேருந்து சேவை இயக்கப்படும். 2 கி.மீ தூரத்துக்கு ரூ.4 கட்டணமாகவும், 26 கி.மீ தூரத்துக்கு ரூ.16 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ்நாட்டில் தற்பொழுது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கடந்த சட்டமன்றத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார். அதன்படி முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 1,842 புதிய மினி பேருந்துகள் சேவையை தஞ்சாவூரில் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர் தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.325.96 கோடி செலவில் 2461 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.309.48 கோடி மதிப்பீட்டில் 4127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

இதன்பின் அவர் பேசியதாவது:- சோழநாட்டு காற்றை சுவாசித்தாலே கம்பீரம் கிடைக்கிறது. தஞ்சாவூரையும் கலைஞர் கருணாநிதியையும் பிரித்து பார்க்க முடியாது. ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் மைந்தர் கலைஞர் கருணாநிதி. கலைஞர் கருணாநிதியின் வழியின் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சை வந்துள்ளேன்.

டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்திற்கு ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடிக்காக ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. டெல்டா அல்லாத மாவட்டங்களில் சாகுபடிக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

தி.மு.க ஆட்சியில் தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். மேட்டூர் மற்றும் கல்லணைகள் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் ரூ.70 கோடி மதிப்பில் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளளது. 

WhatsApp Image 2025-06-16 at 15.33.07_ed04e4e6

கார், குறுவை, சொர்ணவாரி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவர். தஞ்சை மண்ணில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும். வெண்ணாறு, வெட்டாறு பிரியும் இடத்தில் ரூ.42 கோடியில் பாலம் அமைக்கப்படும். 

கல்லணை கால்வாய் சாலை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முன்னதாக, இதற்கு முன்பு கடந்த 1998 - ம் வருஷம், ஜூன் 23 - ம் தேதி அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கல்லணையை திறந்திருக்கிறார். அதன்பிறகு, தந்தை வழியில் இரண்டாவது முதல்வராக கல்லணையை திறந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தஞ்சையில் முதல்வர் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி ஆர் பாலு, கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், கோவிசெழியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

Thanjavur Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: