/tamil-ie/media/media_files/uploads/2018/02/a404.jpg)
காவிரி நீர் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதோடு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அதில் பங்கேற்க அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவிரி நதி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசின் சார்பில் 22.02.2018 அன்று அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். தமிழக அரசே கூட்டத்தை நடத்துவதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 23.2.2018 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்று காவிரி நதி நீர் பிரச்னை குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழக விவசாயிகளின் கருத்துகள், ஆலோசனைகள் மிக முக்கியமாக கேட்கப்பட வேண்டிய தேவையிருப்பதால், அனைத்து கட்சிகள் மட்டுமின்றி தமிழக விவசாயிகள் சங்கங்களின் பிரநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்று தீர்ப்பு வெளிவந்தவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆகவே, காவிரி பிரச்னையில் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பொருட்டு, அரசின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் பிரநிதிகளையும் அழைக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க - அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து தமிழக அரசின் அறிக்கை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.