தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் தலைவராக இருந்த நீதியரசர் பி.ஆர். சிவகுமார் 11.05.2024 அன்று ஓய்வுபெற்ற நிலையில், இவ்வாணையத்தின்புதிய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசுச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களுடைய முக்கியமான பிரச்னைக்குத் தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாணையத்தின் முந்தைய தலைவர் நீதியரசர் பி.ஆர். சிவகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி 11.05.2024 அன்று ஓய்வுபெற்ற நிலையில், தற்போது இவ்வாணையத்திற்கு நீதியரசர் முனைவர் எஸ். தமிழ்வாணன் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அவர்களை தலைவராக நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். தமிழ்வாணனுக்கு வி.சி.க எம்.பி ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி மாநில ஆணையத்தின் புதிய தலைவருக்கு வாழ்த்துகள்!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி முனைவர் தமிழ்வாணன் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்!
2005 முதல் 2016 வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய அவர் நீதியில் மட்டுமின்றி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர். ஆணையத்தின் பணிகளைத் தயக்கமோ சுணக்கமோ இன்றி முன்னெடுப்பார் என நம்புகிறேன்.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முனைவர் எஸ். தமிழ்வாணன், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள வேலம்புதுக்குடியைச் சேர்ந்தவர். 1990-ல் திருச்சியில் மாவட்ட நீதிபதியாக பணியில் சேர்ந்தார்.
பின்னர் ராமநாதபுரம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய அவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக 2005-ல் பதவி உயர்வு பெற்றார். 2005 முதல் 2016 வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய எஸ். தமிழ்வாணன் 2016-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முனைவர் எஸ். தமிழ்வாணன் தற்போது தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“