சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
சிலைக் கடத்தல் வழக்கு:
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐ.ஜி.பொன்.மணிக்கவேல் விசாரிப்பார் என கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.
கடத்தபட்ட சிலைகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருப்பதால், அவற்றை மீட்க வசதியாக சிபிஐக்கு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதனையடுத்து சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.அந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 22 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் தொடர்பாக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் விசாரணை நடத்த உள்ளதாலேயே வழக்கை சிபிஐ'க்கு மாற்றி அரசாணை பிறப்பித்ததாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளனர். இன்றுடன் ஐ.ஜி.பொன்.மணிக்கவேல் பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிட்ட தக்கது.