ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளில் (ஆதரவு, எதிர்ப்பு) அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், நாளை மறுநாள்(பிப்.18) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்திருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு முதல் இந்த ஆலை இயங்கி வருகிறது. அங்கு பெருமளவில் சுற்றுச் சூழலுக்கு இந்த ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாக தொடங்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நடைபெற்று வந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ம் தேதி போராட்டக் குழுவினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 13 பேர் பலி ஆனார்கள். அதைத் தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டனர். இதன்பிறகு ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அதில் 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என கூறி தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தாவும் வழக்கு தொடர்ந்தது.
இந்தச் சூழ்நிலையில், இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளில் (ஆதரவு, எதிர்ப்பு) அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.