Sterlite Copper Industries : தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காப்பர் உருவாக்கும் ஆலையான ஸ்டெர்லைட். லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா குழுமம் இந்த ஆலையை நடத்தி வருகிறது.
இந்த ஆலையினால் நீர் வளம், காற்று என அனைத்தும் மாசுபடுகிறது என்றும், அதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் என்றும் கூறி அதனை மூட வேண்டும் என பல்வேறு காலமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேதாந்தா மீண்டும் முயற்சி
கடந்த ஆண்டு அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு அதற்கு துப்பாக்கிச் சூட்டினை பயன்படுத்தியது. இதில் அப்பாவி மக்கள் 13 நபர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, காப்பர் ஆலைக்கு மூடி சீல் வைக்கப்பட்டது.
13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஆலையை இழுத்து மூட உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை பிப்ரவரி 18ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் அணுகவும் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஸ்டெர்லைட் தொடர்பாக விசாரணை நடத்த நேரம் இல்லை என்று குறிப்பிட்டு, பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தது வேதாந்தா குழுமம். ஆனால் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.