தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆலைக்கு சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுதாக்கல் செய்ததையடுத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
ஆலையை ஆய்வு செய்ய மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த குழு, தனது அறிக்கையை 48 கவர்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
அதன் அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும், ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது, முறையாக நோட்டீஸ் அனுப்பிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயம் அடுத்தக்கட்ட விசாரணைக்கு வழக்கை ஒத்தி வைத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்க வேண்டும். ஆலைகளில் இருந்து வெளியேற்றும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். 3 வாரத்தில் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், சேலம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, "பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.