/tamil-ie/media/media_files/uploads/2019/01/a306.jpg)
Vedanta limited Sterlite industries donated rs 5 crore to CMPRF
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்திருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு முதல் இந்த ஆலை இயங்கி வருகிறது. அங்கு பெருமளவில் சுற்றுச் சூழலுக்கு இந்த ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாக தொடங்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நடைபெற்று வந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ம் தேதி போராட்டக் குழுவினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 13 பேர் பலி ஆனார்கள். அதைத் தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டனர். இதன்பிறகு ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அதில் 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்த தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையையும் நிறுத்தி வைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.