கொரோனா வைரஸ் தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் ஏப்ரல் 9-ம் தேதி இரவு தமிழகத்திற்கு வந்துவிடும் என்று முதல்வர் பழனிசாமி கூறிய நிலையில், ரேபிட் டெஸ் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. இதற்கு காரணம் என்ன என்று பரவலாக கேள்வி எழுந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கைகளும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள அனைவருக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனைக் கருவிகள் மூலம் வேகமாக பரிசோதனை செய்வதன் மூலம் வைரஸ் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை பி.சி.ஆர் என்கிற சோதனை முறையில் கண்டறியப்படுகிறது. இந்த முறையில் சோதனை செய்து கண்டறிவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகும்.
வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கும்போது, பரிசோதனை எண்ணிக்கையும் வேகமும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை தமிழக அரசு உடனடியாக வாங்க வேண்டும் என்று வல்லுனர்கள்ள் கருத்து தெரிவித்தனர். அதே போல, தமிழக அரசும், ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை வாங்க முடிவு செய்தது. ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனைக் கருவிகளை சீன நிறுவனங்கள்தான் தயாரித்து வழங்கி வருகின்றன.
இந்த சூழலில்தான், ஏப்ரல் 9-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனைக் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்ரு இரவுக்குள் 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தமிழகத்திற்கு வந்துவிடும் என்று கூறினார்.
ஆனால், முதல்வர் கூறியபடி, தமிழகத்திற்கு இன்னும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வரவில்லை. தமிழகத்திற்கு மட்டுமல்ல சில ஐரோப்பிய நாடுகளுக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் வரவேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் வரவில்லை. ஸ்பெயின், ஜெர்மனி நாடுகள் தங்களுக்கு வரவேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை அமெரிக்கா தடம்மாற்றிக்கொண்டுவிட்டதாக புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய, தலைமைச் செயலாளர் சண்முகம், ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனைக் கருவிகள் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை. இந்தியாவிற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் அமெரிக்காவுக்கு சென்று விட்டன. இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சில சீன நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கின்றன. அவர்களிடம் நாம் ஆர்டர் செய்திருந்த கருவிகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டனர். விரைவில் அவர்கள் நமக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை அனுப்புவார்கள். தமிழகம் முதலில் ஆர்டர் செய்திருப்பதால், 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தமிழகத்திற்கு முதல் கட்டமாக வரும். ஏற்கெனவே பி.சி.ஆர் முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது. பி.சி.ஆர் பரிசோதனை முறை மிகவும் நம்பகமானது உறுதியானது. போதுமான அளவு பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் உள்ளது.” என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, இந்தியாவுக்கு வரவேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் செல்ல வேண்டிய பரிசோதனை கருவிகளை வாங்கிக்கொண்டுள்ளது தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.