#StopHindiImposition: மத்திய அரசின் புதிய வரைவுக் கொள்கை நேற்று வெளியிடப்பட்டது.
இந்த வரைவுக் கொள்கையில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை 1986 கொண்டு வரப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது.
பின்னர் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி, கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் குழு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை, மனித வள மேம்பாட்டு அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட, ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் சமர்ப்பித்தது.
அதில் இந்தி பேசாத மாநிலங்களில், அதை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இதற்கு தமிழகத்தில் பெறும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. #StopHindiImposition, #TNAgainstHindiImposition என்ற ஹேஷ் டேக்குகளில் தொடர்ந்து இந்திக்கு எதிரான தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள் தமிழர்கள். இவை இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்ட் ஆகியுள்ளன.
தவிர, அரசியல்வாதிகள் பலரும் இந்தி திணிப்புக்கு எதிரான தங்களது முழக்கங்களை முன் வைத்து வருகிறார்கள்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்துள்ள 484 பக்க தேசிய கல்விக் கொள்கையில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும், அதற்காக மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த, திமுக எம்.பி கனிமொழி, “மொழி திணிப்பை திமுக தொடர்ந்து எதிர்க்கும்” என்றார்.
திருச்சி விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த கமல் ஹாசன், “மொழித்திணிப்பை ஏற்க மாட்டோம் என்பதை தமிழர்கள் ஏற்கெனவே அழுத்தமாகப் பதிவு” எனக் குறிப்பிட்டார்.
அமமுக-வின் பொதுச் செயலாளர், "8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைத் திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். எனவே இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் ” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.