புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தவறுதலாக வெளியேறிய குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அம்மாசத்திரம் அருகே துப்பாக்கி சுடும் மையம் உள்ளது. டிசம்பர் 30ம் தேதி நார்த்தாமலையில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, தவறுதலாக வெளியேறிய குண்டு அருகே வீட்டில் இருந்த 11 வயது சிறுவன்புகழேந்தி தலையில் பாய்ந்தது. குண்டு பாய்ந்ததால் படுகாயம் அடைந்த சிறுவன் புகழேந்தி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சிறுவன் புகழேந்தி தலையில் இருந்து துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டு சிறுவனுக்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுவனுக்கு இதய செயல்பாடுகள் மட்டுமே இருந்ததாகவும் மூளை செயல்படவில்லை என்று மருத்துவர்கள் கூறி வந்தனர்.
துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து சிறுவன் படுகாய அடைந்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சி.ஐ.எஸ்.எப் மீது புதுக்கோட்டை வெள்ளனூர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்து, 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் புகழேந்தி இன்று (ஜனவரி 3) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த தகவல் கேட்டு சிறுவனின் பெற்றோர்களும் குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் உறவினர்கள், நியாயம் கேட்டு பொதுமக்கள் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரத்திற்க் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுவனின் உறவினர்கள் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சிறுவனின் உறவினர்கள், சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பசுமலை பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்படும் என இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பொதுமக்களிடம் உறுதியளித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆட்சியர் முடிவு செய்துள்ளார் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
இதனிடையே, துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தி குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்ததோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.