/indian-express-tamil/media/media_files/2025/08/22/stray-dogs-in-delhi-to-be-released-in-same-localities-after-vaccination-sc-modifies-aug-11-order-2025-08-22-11-22-26.jpg)
Stray dogs case
சென்னை: சென்னை மாநகரில் ஆபத்தான ராட்வீலர் போன்ற நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களையும், தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில்கொண்டு, இந்த விவகாரத்தில் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆராய்ந்து தீர்வு காணுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.
சென்னையில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் ராட்வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய்கள், உரிய பாதுகாப்பு இல்லாமல் பொது இடங்களுக்கு அழைத்து வரப்படுவதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கடிபட்டு பாதிக்கப்படுவதாக, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழவேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முக்கிய நோக்கம், இதுபோன்ற ஆபத்தான நாய்களை தடை செய்வது அல்லது அவற்றை முறையாகக் கட்டுப்படுத்துவது தொடர்பானது.
இந்த வழக்கு முந்தைய விசாரணைக்கு வந்தபோது, தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதியில் விடுவது தொடர்பான வழக்கமான நடைமுறைகளுக்குப் பதிலாக, தனி காப்பகங்கள் அமைத்து அவற்றை பராமரிப்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப். 4) மீண்டும் நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "தெருநாய் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்திற்கே மாற்றுமாறு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் எழுப்பிய அனல் பறக்கும் கேள்விகள்!
வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டாலும், நீதிபதிகள் தெருநாய் விவகாரத்தின் தீவிரத்தை குறித்து சில முக்கியமான கேள்விகளை எழுப்பினர். "ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்குப் பராமரிக்கப் போகிறீர்கள்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பு, "ரேபிஸ் தாக்கிய நாய்களுக்கென தனி காப்பகங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று பதிலளித்தது.
அதற்கு நீதிபதிகள், "அப்படி காப்பகங்கள் அமைக்கப்பட்டாலும், அங்கே உள்ள நாய்களுக்கு உணவு கொடுக்க யாருக்குத்தான் தைரியம் இருக்கும்? மேலும், இதுபோன்ற நாய்களை கையாள வித்தியாசமான நடவடிக்கைகளை எடுத்தால், மிருகவதை தடைச் சட்டத்தை சுட்டிக்காட்டி தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும். வெளிநாடுகளில் தெருநாய் பிரச்சனை எப்படி கையாளப்படுகிறது? அங்கு என்ன மாதிரியான தீர்வுகள் காணப்பட்டுள்ளன என்பதை தமிழக அரசு கண்டறிந்து, அந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்" என்று யோசனை தெரிவித்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால், இனி தெருநாய்கள் விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.