WEB EXCLUSIVE
காவிரி பிரச்னையில் தமிழகமே போராட்ட களமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக உளவுத்துறை ஐஜியான சத்தியமூர்த்தி, கோடையை அனுபவிக்க விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளிலும் பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதையடுத்து கவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. நாளை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது.
ஏற்கனவே கடந்த 10ம் தேதி, சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தது. ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராடினார்கள். அந்த போராட்டத்தின் போது சில நபர்கள் போலீசாரை குறிவைத்து தாக்கினர். இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்ட பின்னர்தான் இந்த விவகாரம் பெரிதானது.
இந்நிலையில் மத்திய உளவுத்துறை, தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் தங்களுடைய தங்களுடைய கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டுள்ளதாகவும், மதவாத அமைப்புகளுடன் கைகோர்த்து இருக்கிறார்கள் என்றும் தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. மேலும் அவர்களின் இலக்கு முதல்வர் போன்ற முக்கிய புள்ளிகள்தான் என்றும் சொல்லியுள்ளனர். மேலும் சில அமைப்புகள் தனித்தமிழகம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழ்நாடு விடுதலை படையைச் சேர்ந்த பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட தமிழரசன் புகைப்படத்தை வெளிப்படையாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்றும் மத்திய உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும் மே மாதம் 3ம் தேதி காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அறிக்கை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்பட்டும் ஸ்கீம் எப்படி இருந்தாலும் போராட்டம் நடத்த சில அமைப்புகள் இப்போதே தயாராகி வருகின்றன.
இத்தகைய சூழலில் தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி, நேற்று விடுமுறையில் சென்றுள்ளார். 20 நாள் விடுப்பு எடுத்துள்ள அவர், குடும்பத்துடன் வெளிநாடு செல்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகமே கொந்தளிப்பான சூழலில் இருக்கும் போது, உளவுத்துறை அதிகாரி விடுப்பில் செல்வது போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.