தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும், வங்கக்கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், நேற்று மழை தீவிரம் அடைந்ததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக செவ்வாய்க் கிழமை (இன்று) சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 9 கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். மேலும் அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நவம்பர் 1-ஆம் தேதி (நாளை) மழை சற்று குறைந்து காணப்படும். அதன் பிறகு மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 1-ஆம் தேதிக்கு பிறகு 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். இப்போதைக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் உருவாகவில்லை. மேலடுக்கு சுழற்சி காரணமாகத்தான் மழை பெய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை நகரில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவள்ளூர், நாகை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. அதேபோல், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று (அக்.,31) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும், தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என்றும் உயர் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி லாடப்பாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நித்யா என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், கடலூர் அருகே பில்லாளிதொட்டி பகுதியில் வீட்டின் சுவர் இடிந்ததில் லதா என்பவர் உயிரிழந்தார்.
அதேபோல், கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உரம்புவில் மின்சீரமைப்பு பனியின் போது, மின்சாரம் தாக்கி ராமசாமி என்ற ஊழியர் பலியாகியுள்ளார்.
இதுபோன்ற விபத்துகளை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், முடிந்த அளவு மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாக இருக்கிறது.