சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில், மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை ( ஜூலை 15ம் தேதி) காலைவேளையில், சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் பல்கலைகழக கட்டடத்தின் 7வது மாடியிலிருந்து குதித்து ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சமீபகாலமாக இந்த பல்கலைகழகத்தில் அதிகளவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவன் கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்பதும், அவன் இப்பல்கலைகழகத்தில் பி.டெக் இறுதியாண்டு படித்து வருவதும் தெரியவந்துள்ளது. இவனது சகோதரர், இதே பல்கலைகழகத்தில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
பல்கலைகழகத்தில் உள்ள டெக்பார்க் கட்டடத்தின் 7வது மாடியிலிருந்து ஸ்ரீராகவ் கத்தியபடியே குதித்துள்ளார். அலறல் சத்தம் கேட்ட மாணவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மறைமலைநகர் போலீசார், ஸ்ரீராகவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று ஸ்ரீராகவ் துண்டுச்சீட்டு எழுதி வைத்துள்ளதை போலீசார் கண்டறிந்து கைப்பற்றியுள்ளனர்.
ஸ்ரீராகவ், நன்றாக படிக்கும் மாணவன் என்றும், ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை என்று பல்கலைகழக பதிவாளர் சேதுராமன் கூறியுள்ளார். மாணவர்களின் மனநிலைகளை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்க பல்கலைகழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.