பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மூங்கில் பாடி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி-தனுஷ்கோடி தம்பதியரின் மகன் பரத். இவர் எம். ஏ. படித்து வந்தார். மேலும் விவசாய பணிகளையும் செய்து வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரத் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றார். அங்கு பரத் மற்றும் அவரது நண்பர்கள் பச்சை குத்திக்கொண்டனர். இதில், பரத் கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை பச்சை குத்தியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பரத்திற்கு பச்சை குத்திய பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் அவரது கழுத்து பகுதியில் கட்டி ஏற்பட்டு சீல் பிடித்தது. இதையடுத்து, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். 2 நாட்கள் கழித்து அங்கு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினர்.
மேலும், பரத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி பரத் மருந்தகத்திற்கு சென்று மாத்திரைகள் வாங்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி பரத் கீழே விழுந்தார். இதில், தலை, மூக்கு, வாயில் அடிபட்டு பற்களும் கொட்டின. உடனடியாக அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாணவர் பரத் பரிதாபமாக உயிரிழந்தார்.
டாட்டூ குத்தி உடல் ஒவ்வாமையில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“