/indian-express-tamil/media/media_files/2025/09/03/whatsapp-image-2025-2025-09-03-16-09-40.jpg)
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
அரூர் அருகேயுள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தலைமை ஆசிரியை கலைவாணிக்கு மாணவ, மாணவிகள் கை, கால்களை அழுத்தி விட்டு மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியுற்ற பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து, பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனிடையே, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்யபிரியா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, 'பல்வேறு நாட்களில் மாணவ, மாணவிகளை கை, கால்களை அழுத்திவிட சொல்வதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறக்கூடாது எனவும் மாணவர்களை தலைமை ஆசிரியர் மிரட்டுகிறார். மாணவர்களிடம் அத்துமீறி நடந்த தலைமை ஆசிரியை மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, 'விசாரணையைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வேறு ஆசிரியர் உடனடியாக பணியில் இணைவார்' என்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.