அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்து மூன்று நீதிபதிகள் அமர்வு ஆய்வுக்கு அனுப்பி வைக்க தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பரிந்துரைத்துள்ளது.
அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, 2015 - 16 முதல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கட்டணம் நிர்ணயிக்கும் போது அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு நிர்ணயிக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி எம்.வி.முரளீதரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர்களின் ஊதியத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட குழு, ஆசிரியர்களுக்கான சேமநல நிதி பங்களிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ஆகும் செலவு உள்ளிட்ட செலவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்ச ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என குழு தெரிவித்துள்ளதாகவும் தனியார் பள்ளிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வித் தரத்தை பேணுவதற்காக பள்ளிகள் தங்கள் விருப்பம் போல ஆசிரியர்களை நியமிக்க உரிமை உள்ளது... குறைந்தபட்ச ஆசிரியர்கள் குறித்து தெரிவித்துள்ள கல்வி உரிமைச் சட்டத்தில் அதிகபட்சமாக ஆசிரியர்கள் எத்தனை பேரை நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கவில்லை... அதனால் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆய்வு செய்ய, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.
மேலும், இப்பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக பரிசீலித்து சட்டப்படி தகுந்த முடிவை எடுப்பதற்காக இந்த விவகாரத்தை மீண்டும் கட்டண நிர்ணயக் குழுவுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.