சுபஸ்ரீ வழக்கு - கைதான நான்கு தொழிலாளர்களும் ஜாமீனில் விடுவிப்பு
ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். சாலையில் பேனர்கள் வைக்க அனுமதி பெறப்பட்டதா? என நீதிபதி கேட்டதற்கு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று 4 பேரும் கூறினர்
சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர்.
Advertisment
அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். அதன்படி, சம்பந்தப்பட்டவர் கைதானாலும் ஜாமீனில் வெளியே வரக்கூடிய பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரித்தது.
இதனால் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தலைமறைவானார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவரை நேற்று கிருஷ்ணகிரியில் வைத்து போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, பேனர் கட்டியதாக பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். சாலையில் பேனர்கள் வைக்க அனுமதி பெறப்பட்டதா? என நீதிபதி கேட்டதற்கு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று 4 பேரும் கூறினர்.
அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், சிறையிலடைக்கும்படி உத்தரவிட நீதிபதி மறுத்தார். பிறகு, கைது செய்யப்பட்ட கூலித்தொழிலாளர்கள் 4 பேரையும் காவல் நிலையத்திலேயே சொந்த ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news