ஈஷா மையத்தில் மாயமான பெண் சுபஸ்ரீ, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பழனிகுமார். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரது மனைவி சுபஶ்ரீயும் (34) தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ சைலன்ஸ் என்ற யோகா பயிற்சியை ஈசா யோகா மையத்தில் மேற்கொண்டுள்ளார்.
Advertisment
இதைத்தொடர்ந்து மற்றொரு பயிற்சிக்காக கடந்த 11ஆம் தேதி கோவை ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார். அப்போது அவரது கணவர் காலை 6 மணியளவில் விட்டு சென்றுள்ளார். டிசம்பர் 18"ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில் அவரை அழைத்து செல்ல கணவர் பழனிகுமார் ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார்.
இதற்காக காலை 6 மணிக்கே வந்து காத்திருத்த அவர் - 11 மணி ஆகியும் சுபஶ்ரீ வராத நிலையில், செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு அழைப்பு செல்லாத நிலையில் - ஈஷா யோகா மையத்தினர் காலையிலேயே பயிற்சி முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சுபஸ்ரீ
Advertisment
Advertisements
இதனால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது காலையிலேயே ஈசா யோகா மையத்தின் மற்றொரு கேட் வழியே வெளியேறிய சுபஶ்ரீ, கால் டாக்ஸியில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்கு சென்றது தகவல் தெரியவந்தது.
வேறொரு எண்ணில் இருந்து தனக்கு வந்த அழைப்பை பழனிக்குமார் தொடர்பு கொண்டபோது, “என் கணவரிடம் பேச வேண்டும் என பெண் ஒருவர் சொல்லிவிட்டு, அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறி சென்றுவிட்டார்” என அந்த எண்ணில் பேசிய நபர் கூறியுள்ளார் என தகவல் கூறப்படுகின்றது.
இதன் பின்னர் சுபஶ்ரீயை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பழனிக்குமார், மனைவி சுபஶ்ரீ மாயமானது குறித்து ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை தொடங்கினர்.
பயிற்சியின்போது கையில் செல்போன் மற்றும் உடமைகளுடன் சென்றிருந்த சுபஶ்ரீ, பயிற்சிக்கு பின் வெளியே வரும்போது கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை நிறை உடை அணிந்து காணப்பட்டார். மேலும், அவர் சாலையில் ஓடுவது போல் இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதற்கிடையில், சுபஶ்ரீயை கண்டுபிடிக்க 6 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைககப்பட்டது.
மேலும் அவரது புகைப்படம் அனைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை செம்மேடு காந்திநகர் அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இறந்தது சுபஸ்ரீ தான் என அவரது கணவர் மோதிரம் மற்றும் ஈசாவின் அடையாளம் அவரது கையில் அணிந்திருந்ததை வைத்து உறுதிபடுத்தினார். சுபஸ்ரீயின் உடலை மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுபஸ்ரீ தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஷா யோக மையத்தில் சிறப்பு வகுப்பிற்குச் சென்ற பெண் காணாமல் போனது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , வழக்கு விசாரணையில் உள்ளதால் சில தகவல்களை வெளிப்படையாக கூற முடியாது எனவும் சனிக்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/