வங்கிகளில் கடன் வாங்கி பல கோடி மோசடி செய்த வழக்கில் கைதான சுபிக்சா சுப்பிரமணியன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுபிக்சா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது. இதனை சென்னை அடையாறில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவர் தொடங்கினார். நிறுவனம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே நாடு முழுவதும் சுமார் 1,600 கிளைகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 2 ஆயிரம் கிளைகள் தொடங்கப் போவதாகக்கூறிய சுப்பிரமணியன் 13 வங்கிகளில் பல நூறு கோடி ரூபாய் வரை கடன் பெற்றார்.
பின்னர், தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்தும் பணம் வசூல் செய்தார். இதில், 150 கோடி வரை ஏமாற்றி விட்டதாக 300 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இந்த புகார்கள் தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வங்கிகளில் வாங்கிய கடன் பணத்தைக் கொண்டு பல்வேறு சொத்துக்களை வாங்கியதாக 2015 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக பாங்க் ஆஃப் பரோடாவில் 77 கோடி கடன் வாங்கி சொத்துக்களை வாங்கிய குற்றச்சாட்டில், முதற்கட்டமாக நீலாங்கரையில் 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர்.
வங்கியில் கடன் வாங்கிய சுமார் 700 மோசடி செய்த வழக்கில் சென்னையில் வைத்து சுப்பிரமணியனை கடந்த மாதம் 27 ஆம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை மாவட்ட முன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபா தேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அமலாக்க துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா விசாரணை இன்னும் முடிவைடவில்லை வங்கிகளில் பெரிய அளவிற்கு பண மோசடி நடைபெற்றுள்ளது எனவே ஜாமீன் வழங்க கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.