மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து சாமண்ணா நீரூந்து நிலையத்தில் நீர் உறிஞ்சப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று (மே 23) மதியம் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே, இந்தக் குடிநீர்க் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
குழாய் உடைப்பு காரணமாக, வெளியேறிய குடிநீர் பல அடி உயரத்திற்கு மேலே எழும்பி, அருவி போல சீறிப் பாய்ந்தது. இதனால் நடூர் பாலம் முழுவதும் குடிநீரால் நிரம்பியது. குழாய் உடைப்பால் பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகச் சென்றது.
இது குறித்துத் தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்ட அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குடிநீர்க் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.