மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 75 மணி நேரத்தைக் கடந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. குழந்தையை மீட்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. குழந்தை சுஜித் இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் 88 அடி ஆழத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், சுஜித் சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே 2 மீட்டர் தொலைவில் ரிக் இயந்திரம் மூலம் 98 அடிகள் துளையிட்டு பின்னர், பக்கவாட்டில் ஹாரிசாண்டிலாக குழந்தை இருக்கும் துளைக்கு துளையிட்டு குழந்தையை மீட்பது என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி துளையிடும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் திருச்சி, மணப்பாறை, பெரம்பலூர் பகுதிகளில் நில அமைப்பை ஆய்வு செய்த நில அமைப்பியல் துறை பேராசிரியர் வி.சுப்பிரமணியன் ஊடகத்தில் பேசுகையில், “லைம்ஸ்டோன் பாறையை ஒரு 10 -15 நிமிடத்தில் ஒரு மீட்டர் துளையிடலாம். ஆனால், மணப்பாறையில் ஒரு மீட்டர் துளையிடுவதற்கு 3 மணி நேரம் ஆகும். இந்த பாறைகளில் குவார்ட்ஸ் என்ற பொருள் உள்ளதால் கடினமாக இருக்கும். மணப்பாறை பகுதியில் 40 அடி 55 அடி ஆழத்தில் மணல் இருப்பதாகக் கூறுவது வாய்ப்பு இல்லை.
குழந்தை உள்ள துளையை நோக்கி பக்கவாட்டில் துளையிட்டு குழந்தை உள்ள பகுதிக்கு 10 அடி ஆழம் கீழேதான் செல்ல முடியும். அதன் பிறகு குழந்தையை எப்படி மீட்பார்கள் என்பது தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பக்கவாட்டில் ஹாரிசாண்ட்டாக துளையிடுவது கடினம். அது பற்றி அங்கே இருப்பவர்கள் இன்னும் கூறப்படவில்லை. 5 மணி நேரத்தில் ஒரு மீட்டர் அழம் மட்டுமெ துளையிட்டுள்ளார்கள். தற்போது 55 அடி ஆழம் துளையிட்டுள்ளனர். அதனால்,
என்னுடைய கவலையெல்லாம் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை எல்லாம் மூட வேண்டும். ஏனென்றால், வேப்பந்தட்டை பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்றில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தபோது அதில் இருந்த தண்ணீரில் நைட்ரேட் மாசு இருந்தது. இதற்கு காரணம், விவசாய நிலங்களில் நைட்ரஜன் உரம் இடப்படுகிறது. அதில் தேங்கும் மழை நீரை ஆழ்துளை கிணற்றுக்குள் மழைநீர் சேகரிப்பு முறையில் நேரடியாக செலுத்தியதுதான் காரணம் என்பது தெரிய வந்தது. அதனால், பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை எல்லாம் மூடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.