தமிழகத்தில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் ஒருபுறம் வெயிலை சுட்டெரித்து வரும் நிலையில், மறுபுறம் பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், இரவு 10 மணி வரை தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் பிற்பகலில் திடீரென பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் மதிய நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், மக்கள் வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர்ந்தனர். இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 10 மணி வரை தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த மழையின் காரணமாக சாலைகளில் நீர் தேங்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. நேற்று வேலூரில் அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. திருச்சி, மதுரை, திருத்தணி ஆகிய இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சென்னையில் இன்று பிற்பகலில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சிங்கப்பூர், மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரு, சூரத் ஆகிய நகரங்களிலிருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன. மதுரை மற்றும் திருச்சி விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படவிருந்த 11 விமானங்கள் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பின்னர் வானிலை சீரானதும் திருப்பி அனுப்பப்பட்ட மற்றும் வட்டமடித்த விமானங்கள் தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை ஆய்வு மையம் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது.