தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த தீர்ப்பிற்கு பின்பு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் காவிரி மேலாண்மை அமைப்பத்தில் தீவிரம் காட்டினார். பிரதமரை சந்திப்பது, நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என பல்வேறு கட்டங்களை தாண்டியும் தற்போது வரை மத்திய அரசு மவுனம் கலைக்காமல் இருந்து வருகிறது.
உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் இன்றுடன்(29.3.18) முடிவடையும் நிலையில், மத்திய அரசு காவிரி மேற்பார்வை குழு அமைக்க ஆலோசிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுக் குறித்து தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.
அனைத்து தரப்பினரும், எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுக் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “ காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
இறுதியாக ஆங்கிலத்தில், ”I sincerely hope justice will prevail.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
,
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பு வெளியான நாள் அன்றும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தீர்ப்பு குறித்துக் கருத்து கூறியிருந்தார்.
,