ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளதால், பேரணி நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டனர்.
பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்ததையும் மீறி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டதால் அவர்களை சமாளிக்க முடியாமல் காவல்துறை பின்வாங்கியது.
இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சூறையாடினர். மேலும், அங்கிருந்த வாகனங்களுக்குப் பொதுமக்கள் தீவைத்தனர். இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட சில சமூக அமைப்புகள் தான் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும், போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சார்பில் ரஜினி மக்கள் மன்றத்தின் ட்விட்டர் பக்கத்தில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.