சென்னையில் நடைபெற்ற கார் பந்தய செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் தர வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘சென்னை ஃபார்முலா 4 கார்’ பந்தயத்தை 3 ஆண்டுகளுக்கு நடத்துவதற்காக தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டன. அதன்படி முதல் பந்தயம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சென்னை தீவுத் திடலை சுற்றி ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி கூறிய தீர்ப்பில், ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடையில்லை என்றும், நிபந்தனையுடன் அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்தது. மேலும், கார் பந்தயத்துக்கு செய்யப்பட்ட செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் வழங்க வேண்டும். குறிப்பாக 42 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் ஃபார்முலா கார் பந்தயம் தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கார் பந்தய எதிர்ப்பாளர்கள் ஆஜராகி, “கார் பந்தயம் தொடர்பான விவகாரத்தில் பணம் என்பது அதிகப்படியாக செலவழிக்கப்பட்டுள்ளது. முறையான பாதுகாப்பு இல்லை. உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் நடத்தப்பட்டது. எனவே வரும் காலத்தில் இது போன்ற கார் பந்தயங்கள் நடக்கக் கூடாது” என கோரினர்
ஆனால் நீதிபதிகள், “கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளை நடத்துவது என்பது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயமாகும். அதில் நீதிமன்றம் தலையிட்டு எப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியும்?” என கேள்வி எழுப்பினர். மேலும் கார் பந்தயத்துக்கு செய்யப்பட்ட செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.