அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தை அரசியல் தளமாகப் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதியமைச்சராக இருந்தபோது, செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடுவதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
“உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில், அவர்களது மூதாதயரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, தற்போது தோராயமாக ரூ.30,000 கோடி இருக்கும்” என வெளியான ஆங்கிலத்தில் உரையாடிய ஆடியோவுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அண்ணாமலையால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது என மறுப்பு தெரிவித்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தொழில்நுட்ப ரீதியாக விளக்கம் ஒன்றையும் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆடியோ குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பிரானேஷ் ராஜமாணிக்கம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள் என கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், கிரிமினல் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க போதுமான வாய்ப்பு இருக்கும்போதும், நீதிமன்றத்தை அரசியலுக்கான தளமான பயன்படுத்தக் கூடாது என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"