/indian-express-tamil/media/media_files/2025/04/28/Szd2skn7Xb0UMSwrKye4.jpg)
செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 28) முடித்து வைத்தது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை தொடர்ந்த பண மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, கடந்த 23-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி, அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமினில் சுதந்திரமாக இருக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், இதற்கான விசாரணையை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 27) மாலை செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சூழலில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (ஏப்ரல் 28) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையை, செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிரான மனுக்களை முடித்து வைத்தனர். எனினும், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று செந்தில் பாலாஜி அமைச்சரானால், இதே போன்று மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய சூழல் எழலாம் என்பதால், அவர் அமைச்சராகக் கூடாது என்று நிபந்தனை விதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டது.
ஆனால், ஒரு நபர் அமைச்சராகக் கூடாது என்று கூறவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஜாமின் தான் தேவை என்ற அடிப்படையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை முடித்து வைத்தது. மேலும், அவருக்கு நிபந்தனை விதிக்க தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.