/indian-express-tamil/media/media_files/2025/09/09/madurai-corp-supreme-court-2025-09-09-15-49-08.jpg)
மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின் சொத்து வரி தொடர்பாக பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் மற்றும் கணக்கீட்டில் 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. ஆனால், தமிழக அரசு இதை குறைத்து காட்டி, வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே ஊழல் நடந்ததாகக் கூறுகிறது. அந்த தொகைக்கு மட்டும் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணை குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் பெரும் அளவில் ஊழல் நடந்திருப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி, முழுமையான விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று (செப்டம்பர் 8) விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது.
“இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது. அதனால், உச்சநீதிமன்றம் இப்போது தனியாக தலையிட தேவையில்லை,” என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம், மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு முடிவுக்கு வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.