தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து 2-வது ஆண்டாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை நிகழ்த்தாமல் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை மரபுப்படி, ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், நிகழ்வின் இறுதியில் தேசியகீதம் பாடுவதும் நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த நடைமுறை மரபை மாற்றி, தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடவேண்டும் என வலியுறுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், சட்டப்பேரவையில் தனது உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த நடவடிக்கை தமிழக சட்டமன்றத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் அவமதிக்கும் செயல் என்று தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதைத்தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கறிஞர் ஜெய சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே, இதுதொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதை சுட்டிக்காட்டி இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.