அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, குழந்தைகளை புறக்கணிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு சிறுமியருக்கான இல்லத்தில், சமூக பாதுகாப்புத் துறையும், குழந்தைகளை காப்போம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து 11.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டியுள்ள பல்நோக்கு வள மையத் திறப்பு விழாவும், கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.
பல்நோக்கு வள மையத்தை துவக்கி வைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்காமல் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் விசாரணை, குழந்தைகளுக்கு அச்சத்தை போக்கும் வகையில் நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், தற்போது மிகவும் அவசியமாகிறது என தெரிவித்தார்.
நாட்டில் இரண்டாவதாக சென்னையில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது. சிறார் நீதிச் சட்டத்தின் படி, குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு அதிகபட்சமாக மூன்றாண்டுகள் மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. இதை சமூக விரோத கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, குழந்தைகளை குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகிறது எனவும், குழந்தைகளை புறக்கணிக்கக் கூடாது எனவும் நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவுறுத்தினார்.
இந்த வளாகத்தில் கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹில் ரமானி, குழந்தைகள் கடவுளின் பரிசு.. அவர்களை பாதுகாப்பது முக்கியமானது.
நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக 30 லட்சம் குற்றங்கள் நிகழ்கின்றன என வேதனை தெரிவித்தார்.
3.5 கோடி குழந்தைகளுக்கு அரவணைப்பு தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, 38 ஆயிரம் குழந்தைகளுக்கு குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ளது எனவும் குறிப்பிட்டார். குழந்தைகள் பாதுகாப்புக்கு தேவையான சட்டங்களை வகுத்து முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பாராட்டு தெரிவித்த தலைமை நீதிபதி, குழந்தைகள் பாதுகாப்புக்கு உயர் நீதிமன்றமும் தீவிரமாக பங்காற்றி வருவதாக தெரிவித்தார்.
இந்த பல்நோக்கு வள மையம், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை கண்ணியமான முறையில் விசாரிக்க வகை செய்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மை செயலாளர் மணிவாசன், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.