மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை தேர்வு செய்யலாம், ஆனால் நியமிக்க கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் செல்லதுரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து, மதுரையை சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக இருந்த பேராசிரியர் சீனிவாசன் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில், செல்லதுரை உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் கிடையாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பல்கலைக்கழக துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், துணைவேந்தரை நியமிக்க அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் மூன்றில் 2 பேர் செல்லதுரையை பரிந்துரைக்காத நிலையில் அவரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் அமர்வு, துணைவேந்தர் செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் புதிய தேடுதல் குழுவை அமைத்து மீண்டும் துணைவேந்தரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், புதிய துணை வேந்தரை நியமிக்க நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரியும் செல்லதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். அதே நேரத்தில், புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய தடையில்லை. ஆனால், நியமிக்க கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.