தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த நவம்பர் 15 ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் காவல்துறையிடம் அனுமதி கோரியது. இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பேரணி நடத்த அனுமதி அளித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16 ஆம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இருப்பினும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது என்று தெரிவித்தார். அப்போது, உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது உச்ச நீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு செய்தீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால் உச்சநீதிமன்றம் தலையிடவேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபங்கர் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கை கருதினால் மாநில அரசே தேதிகளை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, பேரணிக்கு தேதி ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை. பேரணி நடைபெறும் வழியில் தான் பிரச்சனை உள்ளது. நவம்பர் 22 முதல் 29 வரை தமிழ்நாட்டில் பல்வேறு விழாக்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு பேரணி என குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் அனுமதி வழங்க முடியும் என தெரிவித்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 என இரு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் அனுமதி வழங்கப்படும். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தும் தேதிகளில் வேறு சில மத விழாக்கள் நடைபெறுவதால் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. பேரணி செல்லும் பாதையை மாநில அரசு தீர்மானிக்கும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“