Advertisment

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?, சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Supreme Court order on Savukku Shankar  Goondas Act TN Govt Tamil News

சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது உச்சநீதிமன்றம்.

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை போலீசார் கைது செய்தனர். 

Advertisment

இதனிடையே, தேனியில் கைது செய்யப்படும்  சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்டப்பட்டது. மேலும், சவுக்கு மீது சென்னை, திருச்சி கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். 

நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்று வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். 

இதையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் விலகினார். 

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணையின் போது, 'தடுப்பு காவலில் ஒருவரை வைப்பது மிக தீவிரமான விஷயம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலா சவுக்கு சங்கர் செயல்பட்டார்? என தமிழ்நாடு அரசு தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் சவுக்கு சங்கரின் செயல் மன்னிக்க முடியாததுதான். இருப்பினும், அவரை இடைக்கால ஜாமினில் ஏன் விடுவிக்ககூடாது? என்றும் நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர். 

"சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்தின் கீழான கைதுக்கு எதிரான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும்." என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Supreme Court Savukku Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment