Kilambakkam: சென்னை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து முனையத்தில் இருந்து தான் அரசு பஸ்களும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. ஆனால், ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்திய நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 9 ஆம் தேதி அன்று மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேட்டை சுற்றியுள்ள பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கலாம் என உத்தவிரவிட்டது.
மேலும், போரூர் மற்றும் சூரப்பேடு டோல் சுங்கச்சாவடி நிறுத்தங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்கவேண்டும் என்றும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லாமல் இயக்கப்பட கூடாது என்றும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா இடைக்கால உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கண்டிப்பு
ஆனால், போக்குவரத்துத் துறை தரப்பில் கடந்த 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. ஆம்னி பேருந்துகள், தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை குறிப்பிட வேண்டும்.
ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த தவறான புரிதலின் காரணமாக பொதுமக்களிடையே தேயைற்ற குழப்பத்தினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறது." என்று கண்டிப்புடன் கூறியது.
தள்ளுபடி
இதனிடையே, கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்?, உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம்” என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
எச்சரிக்கை
இந்த நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், உத்தரவை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போரூர் சுங்கச்சாவடி ,சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன்படி, சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது.
இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“