மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும் என செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 19 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த முறை நடந்த விசாரணையின்போது செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், இதயம், மூளை, நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என வாதிடப்பட்டது.
ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம் என்றும், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், பைபாஸ் அறுவை சிகிச்சை தற்போது குடல் வால் அறுவை சிகிச்சை போல் சாதாரணமாகிவிட்டது. மூளை தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக கூகுள் செய்து பார்த்ததில் குணப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. எனவே, மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும், என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சாதாரண மனு தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஜாமீன் மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு திரும்ப பெற்றுக் கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“